அண்ணா பல்கலைக்கழகம் மறுதேர்வுக்கு 3-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

303 0

பொறியியல் கல்லூரி மாணவர்கள், மறு தேர்வு எழுத ஜூன் 3-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க வேண்டிய பருவத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் இணைய வழியில் நடத்தப்பட்டது.

அந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. சுமார் 1 லட்சம் மாணவர்களுக்கான முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், நன்றாக படித்த மாணவர்களுக்கு அரியர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டதால் கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்தனர்.

இதையடுத்து, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, ஏற்கெனவே நடைபெற்ற தேர்வை எழுதிய மாணவர்கள் வேண்டுமானால் மறு தேர்வை எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மறு தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது.   https://annauniv.edu என்ற இணையதளத்தில் வரும் ஜூன் 3-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மறுதேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 7010444623 என்ற செல்போன் எண் அல்லது coewp2020@gmail.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.