கிளிநொச்சி – தருமபுரம் பிரதேச வைத்தியசாலை காணி அபகரிப்பு

266 0

அமைச்சர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி, கிளிநொச்சி – தருமபுரம் பிரதேச வைத்தியசாலையின் காணியை, தனியார் இருவர் அடாத்தாகப் பிடித்துள்ளதாக, தருமபுரம் பொலிஸ் நிலையத்தில், இன்று  (24) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரம் பிரதேச வைத்தியசாலை நிர்வாகத்தினரால், இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு அருகில் குடியிருக்கும் குடும்பமொன்று, வைத்தியசாலையின் காணியை உரிமை கோரிய போது, நீதிமன்றத்தாலும் பிரதேச செயலகத்தாலும் அரை ஏக்கர் காணி ஏற்கெனவே வழங்கப்பட்டு, பிரச்சினை தீர்க்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது அமைச்சர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி, காணிகளின் எல்லையை நகர்த்தி, வைத்தியசாலையின் காணியை அடாத்தாகப் பிடிப்பதுடன், வைத்தியசாலையின் காணியில் காணப்பட்ட தென்னைகளில் இருந்த தேங்காய்களையும் பிடுங்கி எடுப்பதாக, வைத்தியசாலை நிர்வாகத்தினர், தங்களது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளனர்.