துறைமுகநகர வாக்கெடுப்பில் சந்தேகம் – பொதுஜன பெரமுனவின் முறைப்பாடு குறித்து ஆராய்வு!

384 0

கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு குறித்து முறைப்பாடளிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்களை கணக்கிடும் இலத்திரனியல் அமைப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிகாரிகளால் நேற்றைய தினம் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபாநாயகரின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இந்த நிலையில்,அன்றைய தினம் இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு உரிய முறையில் கணக்கிடப்படவில்லை என ஆளுங்கட்சி சார்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சபாநாயகரிடம் முறைப்பாட்டினை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.