நுவரெலியா- நானுஓயாவிலுள்ள நெடுங்குடியிருப்பில் தீ விபத்து- 8 வீடுகள் சேதம்

294 0

நுவரெலியா- நானுஓயா, சமர்செட் தோட்டப் பகுதியிலுள்ள நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் முழுமையாகவும் 4 வீடுகள் பகுதியளவிலும் சேதமாகியுள்ளன.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தினால்  8 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிர்சேதம்  ஏற்படாதபோதிலும், பெருமளவான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.  அதாவது வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், மற்றும் பாடப் புத்தகங்கள் ஆகியன  தீக்கிரையாகியுள்ளன.

இதன்போது ஒரு சில பொருட்கள் மாத்திரமே பாதுகாக்கக் கூடியதாக இருந்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக, தோட்ட வாசிகசாலையில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இவர்களுக்கான நிவாரண உதவிகளை, தோட்ட நிர்வாகமும் அனர்த்த முகாமைத்துவ நிலையமும் நுவரெலியா பிரதேச சபையும் இணைந்து வழங்கியுள்ளன.

குறித்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.