மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 10 பேருக்கும்; 14 நாட்கள் விளக்கமறியல்

315 0
மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு கடந்த 18 ம் திகதி தீபச் சுடர் ஏற்றிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 பேரையும் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வெள்ளிக்கிழமை (21) திகதி வாழசை;சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த 18 ம் திகதி நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்திய அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த 10 பேரை பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் பொலிசார் கைது செய்தனர்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வை தலைமைவகித்து செய்திருந்த லவக்குமார் என்பவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டு அவருடைய வீட்டிற்கு 3 தடவைகள் பொலிசார் சென்ற போது அவர் வீட்டில் இல்லாத நிலையில் அவரின் மனைவியார் அதனை பெறமாட்டேன் என தெரிவித்த நிலையில் அவரின் வீட்டின் கதவில் அந்த நீதிமன்ற தடை உத்தரவை பொலிசார் ஓட்டியுள்ளனர்.
இந்த நிலையில் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட லவக்குமார்; 10 பேருடன் சென்று நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச்சுடர் ஏற்றி அதன் பின்னர் பூக்களை கடலில் தூவினர் இதனை படம் எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை 3 நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதியினை பெற்று தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவர்களை 14 நாட்டகள் விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.