கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 236 பேர் மீது வழக்கு

243 0

பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விதி மீறலில் ஈடுபட்ட 18 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். விதிகளை மீறி வாகனங்களில் சென்ற 45 பேர் சிக்கினார்கள்.

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனாபரவல் தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக நேற்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள சோதனைசாவடிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பொது இடங்களிலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது முகக் கவசங்கள் அணியாமல் பொது இடங்களில் சென்ற 173 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

இதேபோல் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விதி மீறலில் ஈடுபட்ட 18 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். விதிகளை மீறி வாகனங்களில் சென்ற 45 பேர் சிக்கினார்கள். நேற்று மாவட்டம் முழுவதும் விதி மீறலில் ஈடுபட்டது தொடர்பாக சிக்கிய 236 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களுக்கு மொத்தம் ரூ.66 ஆயிரத்து100 அபராதம் விதிக்கப்பட்டது. விதிமீறல் தொடர்பாக 37 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.