கொரோனா தடுப்பு பணி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக இன்று ஆய்வு

234 0

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி பதவியேற்றுக்கொண்டார். அன்றிலிருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதையடுத்து சேலம், திருப்பூர், கோவை உள்பட 5 மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து கொரோனா தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்தார்.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலம், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்தார். திருப்பூரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், இன்று காலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
இதனை தொடர்ந்து தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் தயாராகி வரும் சிறப்பு வார்டை முதலமைச்சர் ஆய்வு செய்கிறார்.
மதுரையில் இருந்து திருச்சி செல்லும் மு.க.ஸ்டாலின், பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தைப் பார்வையிடுகிறார்.
திருச்சி அரசு மருத்துவமனை
மாலை 5 மணிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர், தொடர்ந்து என்.ஐ.டி.வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செய்யப்பட்டுள்ள படுக்கை வசதிகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
முதலமைச்சர் வருகையையொட்டி மதுரை மற்றும் திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.