கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் நீக்கம்

314 0

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் பரவும்போது சில மருந்துகளை பயன்படுத்த உலக சுகாதார மையம் பரிந்துரை  செய்திருந்தது. உலக சுகாதார மையத்தின் பரிந்துரையை பெரும்பாலான நாடுகள் கடைபிடித்து வந்தன. வைரஸ் தொற்றின் தாக்கத்திற்கு ஏற்ப உலக சுகாதார மையம் பரிந்துரைகளில் மாற்றம் செய்து வந்தது.
கொரோனா வைரஸ் தொற்று தாக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை இன்னும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது.
இதற்கிடையே ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்திய அளவில் தினசாரி பாதிப்பில் முதல் ஐந்து இடத்திற்குள் இருக்கும் தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதினர்.
ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்து அல்ல என வல்லுனர்கள் கூறிய போதிலும், மக்கள் அதை செவி கொடுத்து கேட்கவில்லை. இந்த நிலையில் உலக சுகாதார மையம், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியுள்ளது.
ஏற்கனவே, இந்தியா கொரோனா தொற்றுக்கு இனிமேல் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படமாட்டாது என்று தெரிவித்திருந்தது. தற்போது உலக சுகாதார மையத்தின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அறிவித்தால் இந்தியாவில் இனிமேல் ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படமாட்டாது.