முடக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அரசாங்கத்தால் நிவாரணப் பொதி!

280 0
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் வைரஸ் தொற்று வேகமாக பரவுவதாக அடையாளம் காணப்பட்டு தற்போது முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ரூபா 5000 பெறுமதியான நிவாரணப் பொதிகள் வழங்கப்படவுள்ளன.

அமைச்சர் பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைவாக 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இந்த பொதிகள் சதோச ஊடாக வழங்கப்படவுள்ளன.

கொவிட் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாட்டை விதிக்க அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை ஏற்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக தெரிவு செய்யப்படும் குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிவாரணப் பொதிகளை விநியோகிப்பதற்காக மாத்திரம் நாடளாவிய ரீதியிலுள்ள சதொச விற்பனை நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.