குழந்தை திருமணங்கள் நடந்தால் புகார் தெரிவியுங்கள்- கலெக்டர் வேண்டுகோள்

260 0

குழந்தை திருமணத்தை முன்னின்று நடத்துபவர்கள், வழிகாட்டுபவர்கள், துணை போகிறவர்கள், ஆதரிப்பவர்கள் மற்றும் மறைப்பவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

குழந்தை திருமண தடுப்புச்சட்டம் 2006-ன் படி 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் செய்யும் திருமணம் சட்டப்படி குற்றமாகும். குழந்தை திருமணத்தை முன்னின்று நடத்துபவர்கள், வழிகாட்டுபவர்கள், துணை போகிறவர்கள், ஆதரிப்பவர்கள் மற்றும் மறைப்பவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
குழந்தை திருமணத்தை நிறுத்துங்கள்

அட்ஷய திருதியையொட்டி ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் திருமணம் அதிகமாக நடைபெறுவதால் 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) குழந்தை திருமணம் நடைபெறா வண்ணம் தடுத்திடும் பொருட்டு, பொதுமக்கள் தங்கள் சுற்றுவட்டார பகுதிகளில் ஏதேனும் குழந்தைகள் திருமணம் நடைபெற உள்ளது பற்றிய தகவல் கிடைத்தால், குழந்தை திருமண தடுப்பு அலுவலர்- மாவட்ட சமூகநல அலுவலர், காவல் துறை, முதல் வகுப்பு நீதிபதி, பெருநகர நீதிபதி, குழந்தைகள் நல குழுமம், குழந்தைகள் வழியம் (தொலைபேசி எண்: 1098, ஊராட்சி அளவிலான கண்காணிப்பு குழு போன்ற துறைகளில் புகார் கொடுக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.