தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மீட்கப்பட்ட எத்தனோல்!

250 0
போலியான ஆவணங்களை பயன்படுத்தி எத்தனோல் கடத்திச் சென்ற நபர் ஒருவர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கசாகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்குணுகொலபெலஸ்ஸ நுழைவில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரவேசித்த லொறி ஒன்று தொடர்பில் சந்தேகித்த அதிவேக நெடுஞ்சாலை பொலிஸ் அதிகாரிகள் லொறியை பின் தொடர்ந்து சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதன்போது, கசாகல பிரதேசத்தில் லொறியினை நிறுத்தி சோதனை இட்ட போது அதில் இருந்து 25 பீப்பாய்களில் 5 ஆயிரம் லீற்றர் எத்தனோல் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த எத்தனோல் போலியான ஆவணங்களை பயன்படுத்தி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்போது, 35 வயதுடைய களனி, தொரண சந்தி பிரதேசத்தை சேர்ந்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சநதேகநபர் மற்றும் எத்தனோல் தொகை மேலதிக விசாரணைகளுக்காக வீரவில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.