வடக்கில் மேலும் 20 பேருக்குக் கொரோனா தொற்று!

257 0

வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 668 பேரின் மாதிரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, யாழ். மாவட்டத்தில் 18 பேருக்கும் கிளிநொச்சி மற்றும் மன்னாரில் தலா ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில், யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவருக்கும் யாழ். சிறைச்சாலையில் ஒன்பது பேருக்கும்  தெல்லிப்பளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட ஐவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், சுன்னாகம் பவர் ஸ்ரேசன் பகுதியில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ங ஒருவருக்கும் மன்னார் பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒரவரக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.