இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி!

367 0

திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பல் துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (07) அதிகாலை 1.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா – காக்காமுனை பகுதியைச் சேர்ந்த எம்.முஜாஹித் (20 வயது) எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை,சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிண்ணியா ரஹ்மானியா வீதியைச் சேர்ந்த 18, 20, 29 மற்றும் 60 வயது உடையவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாகவும் இதில் இராணுவ சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் கிண்ணியா – நடுவூற்று பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் உயிரிழந்தவரின் சடலம் கிண்ணியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மரணம் தொடர்பிலான விசாரணைகளை சீனக்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.