அ.தி.மு.க.,வுக்கு வெற்றி உறுதி ஓ.பி.எஸ்.,-இ.பி.எஸ்., கடிதம்

259 0

கருத்து கணிப்பு முடிவுகள், கட்சியினரை சோர்வடையச் செய்து, ஓட்டு எண்ணிக்கையின் போது, நம் செயல்பாடுகளை முடக்கும் முயற்சிகளே தவிர வேறல்ல. அ.தி.மு.க., தொடர் வெற்றி பெற்று, ஜெ., அரசை அமைக்கும்’ என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கவனம் தேவை

கட்சியினருக்கு, அவர்கள் எழுதியுள்ள கடிதம்:சட்டசபை தேர்தல் முடிவுகள், நாளை வெளியாக உள்ள நிலையில், ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு என்ற பெயரில், ‘டிவி’க்கள் மற்றும் பத்திரிகைகளில், செய்தி தொகுப்புகள் வெளியாகி உள்ளன.இது, கட்சியினர் யாருக்கும், எந்தவித மனசஞ்சலத்தையும் தரவில்லை என்பதை கேட்டு பெருமிதம் கொள்கிறோம்.தமிழகம் முழுதும் இருந்து வருகின்ற, தேர்தல் பணிகள் குறித்த தகவல்கள், அ.தி.மு.க., வரலாறு வியக்கும் வகையில், இந்த தேர்தலிலும், தொடர் வெற்றி பெற்று, ஜெ., அரசை அமைக்கும் என்றே, உறுதிபட தெரிவிக்கின்றன.

கடந்த, 2016 சட்ட சபை பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் முன் வந்த, அனைத்து கருத்து கணிப்புகளும், அ.தி.மு.க., வெற்றியை குறிப்பிடவில்லை. தேர்தல் முடிவுகள் வரும் முதல் நாள் வரை, மாற்று அணியே ஆட்சி அமைக்கும் என, சொல்லிக் கொண்டிருந்தன.ஆனால், ஓட்டு எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரத்திலேயே, அ.தி.மு.க., வெற்றியை உறுதி செய்யும் வகையில், கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகித்ததையும், அறுதி பெரும்பான்மை பெற்று, ஜெ., ஆட்சி அமைத்ததையும் பார்த்தோம்.

தற்போது வெளியிடப்படும் கருத்து கணிப்பு முடிவுகள், கட்சியினரை சோர்வடைய செய்து, ஓட்டு எண்ணிக்கையின் போது, நம் செயல்பாடுகளை முடக்கி, நம்மை ஜனநாயக கடமை ஆற்றவிடாமல் செய்வதற்கான முயற்சிகளே தவிர வேறல்ல.சூழ்ச்சிகள் எதையும் நம்பிவிடாமல், அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு செயல்பட வேண்டும். அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், முகவர்கள், ஓட்டு எண்ணிக்கையின் போது, ஆரம்பத்தில் இருந்தே, கவனமாக இருந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.ஒரு ஓட்டு கூட நம்மிடம் இருந்து பறிக்கப்படாத வகையில், சுற்றி சுழன்று கடமையாற்றுங்கள்.தி.மு.க.,வினர் வதந்திகளை பரப்புவதிலும், தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும், மிகவும் கை தேர்ந்தவர்கள். இதற்கு கடந்த காலங்களில் நடந்த, பல்வேறு நிகழ்வுகளை உதாரணமாக சொல்லலாம்.

தில்லு முல்லு

எனவே, ஓட்டு எண்ணும் மையங்களில், தி.மு.க.,வினரால் தில்லு முல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். முறைகேடுகள் நடந்தால், உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து, தீர்வு காண வேண்டும்.அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள், அவர்களுக்கு என நியமிக்கப்பட்டுள்ள, தலைமை முகவர்கள், ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும், அனைத்து சுற்று ஓட்டு எண்ணிக்கையும் நிறைவடைந்து, முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு தான், அங்கிருந்து வெளியே வர வேண்டும்.எம்.ஜி.ஆர்., ஆட்சி அமைக்க முடியாது; ஜெயலலிதா தோல்வி உறுதி என, பகிரங்கமாக சத்தியம் செய்தவர்கள், வெட்கித் தலைகுனியும் வகையில், மக்கள் நம் கட்சியை இமயத்தின் உச்சியில், வீற்றிருக்க வைத்தனர். அந்த நிலையே இப்போதும் தொடரப் போகிறது.இவ்வாறு, ஓ.பி.எஸ்., – இ.பி.எஸ்., தெரிவித்து உள்ளனர்.

‘மீண்டும்ஜெ., அரசு தான்!’

அமைச்சர் ஜெயகுமார், நேற்று அளித்த பேட்டி:ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு என்ற போர்வையில், கருத்து திணிப்பு நடந்துள்ளது. பல கட்டங்களில், கருத்து கணிப்புகளை தவிடுபொடியாக்கி, அ.தி.மு.க., மிகப்பெரிய அளவு, இமாலய வெற்றி பெற்றது வரலாறு.
கடந்த தேர்தல்களை போல கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி, மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமையும். அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், அமோகமாக வெற்றி பெறுவர். மீண்டும் ஜெ., அரசு அமையும்.இவ்வாறு, அவர் கூறினார்.