சென்னையில் 10,500 கோவேக்சின் தடுப்பூசிகள் மட்டுமே இருப்பு உள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி 1 லட்சம் கைவசம் உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தமிழகத்தில் இதுவரை 51 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதில் கோவேக்சின் தடுப்பூசி முதல் டோஸ் போட்டவர்கள் 2-வது டோஸ் போடுவதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றால் கோவேக்சின் மருந்து தற்போது கைவசம் இல்லை. கோவிஷீல்டு தடுப்பூசி தான் கைவசம் உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி தான் அதிக அளவில் கைவசம் உள்ளது. கோவேக்சின் அந்த அளவுக்கு இல்லை. 50 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் தான் உள்ளது.
சென்னையில் 10,500 கோவேக்சின் தடுப்பூசிகள் மட்டுமே இருப்பு உள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி 1 லட்சம் கைவசம் உள்ளது. இதனால் புதிதாக கோவேக்சின் தடுப்பூசி போட விரும்புபவர்களுக்கு தற்போது தடுப்பூசி போடுவது இல்லை. நிறைய இடங்களில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்பத்திரிகளில் கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். கோவேக்சின் முதல் டோஸ் போட்டவர்கள் 2-வது டோஸ் போட வந்தால் நிறைய ஆஸ்பத்திரிகளில் கோவேக்சின் இருப்பு இல்லை. ஒருவாரம் கழித்து வாருங்கள் என்று திரும்பி அனுப்புகிறார்கள்.
இதனால் கோவேக்சின் 2-வது டோஸ் போடாமல் நிறையபேர் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.