யாழில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

270 0

யாழ்ப்பாணத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பவற்றில் 396 பேரின் மாதிரிகள் நேற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே 16 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இதில், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் 4 பேரும் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்.
இதேவேளை, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 5 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள். ஒருவர் அரச திணைக்களம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் கைதடியைச் சேர்ந்தவர்.

இதேவேளை கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு கொரோனா
தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர் என்றும் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.