வடக்கில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று- ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அவசர கோரிக்கை!

286 0

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் சுகாதார நடைமுறைகளில் இறுக்கத்தை தளர்த்தவேண்டாம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் சரா.புவனேஸ்வரன் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

வடக்கில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் பொதுப்போக்குவரத்துச் சேவைகளில் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் பயணம் செய்கின்றனர்.

விசேடமாக ஆசிரியர்கள் பெருமளவானவர்கள் வெளிமாவட்டங்களில் கடமையாற்றுகின்றனர். அவர்கள் பயணிக்கும் பேருந்துகளில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக கடைப்பிடிப்பதில்லை. இது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி அறிவுறுத்தல்களை வழங்குமாறு ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் கேட்டிருந்தார்.

அத்துடன் வெளிமாகாணம், மாவட்டங்களில் தொழில் நிமித்தம் சென்று வருவோருக்கு முன்னைய இறுக்கமான நடைமுறைகள் இல்லை என்பதனையும் அதனால் கூடவே பணியாற்றுவோருக்கு ஆபத்தானது. என்பதனை அவர் எடுத்துரைத்தார்.

அதற்கு பதிலளித்த பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், அவ்விடயம் தொடர்பில் பொலிஸாரே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சுகாதார அமைச்சு அந்த இறுக்கமான நடைமுறைகளை தொடர்ந்தும் நீடிக்கத்தேவையில்லை என அறிவுறுத்தியுள்ளதாகவும் ஆ.கேதீஸ்வரன் கூறினார். மேலும் இது தொடர்பில் சுகாதார அமைச்சே அறிவுறுத்தல்களை வழங்கும் எனவும் கூறியுள்ளார்