போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 110 பேர் கைது!

410 0

போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்தல் தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கமைய நேற்று முன்தினம் திங்களன்று நாட்டின் பல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருளுடன் தொடர்புடைய 110 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய பளை பொலிஸ் அதிகாரிகளால் அப்பிரதேசத்தில் 239 கிலோ கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையை கொண்டு சென்ற சிறிய ரக வாகனமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளனர். பளை பொலிஸாரால் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை எல்பிட்டிய பொலிஸாரால் 3 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவரும், முகத்துவாரம் பொலிஸாரால் 4 கிராம் ஹெரோயினுடன் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன- என்றார்.