இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் இந்தியாவுக்கு நாடு கடத்தல்

324 0

கடந்த 2016-17-ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை வினியோகித்ததாக கிஷான் சிங் மீது வழக்கு தொடரப்பட்டது.

ராஜஸ்தானி வம்சாவளியை சேர்ந்தவரும், இங்கிலாந்து குடிமகனுமான கிஷான் சிங் (வயது 38) என்பவர் சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த 2016-17-ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை வினியோகித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்தியா அளித்த வேண்டுகோளின்படி கடந்த 2018-ம் ஆண்டு இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நாடு கடத்துவதற்கான வழக்கை விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, கிஷான் சிங்கை இந்தியாவுக்கு நாடு கடத்த கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவை அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து இங்கிலாந்து போலீஸ் அதிகாரிகள் கிஷான் சிங்கை, இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று முன்தினம் மாலையில் கிஷான் சிங் டெல்லி அழைத்து வரப்பட்டார்.