கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி: கோவில்களில் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க அறநிலையத்துறை உத்தரவு

243 0

பக்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற அனைத்து கோவில்களுக்கும் அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கோவில்களில் மீண்டும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க அனைத்து கோவில்களுக்கும் அறநிலையத்துறை சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டு உள்ளது. அர்ச்சனை செய்வது, பிரசாதம், தீர்த்தம் வழங்குவதை தவிர்க்க வேணடுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

பங்குனி மாதம் பிறந்தாலே கோவில்களில் திருவிழா, தேரோட்டம் என களைகட்டுவது வழக்கம். குறிப்பாக வருகிற 28-ந் தேதி பங்குனி உத்திரம் அன்று முருகன் கோவில்கள், சிவாலயங்கள், பெருமாள், அம்மன் கோவில்கள் மற்றும் தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற குலதெய்வ வழிபாடுகள் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது.
இதனால் பக்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற அனைத்து கோவில்களுக்கும் அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். அத்துடன் கோவில் வளாகத்தில் கைகளை சுத்திகரிக்க கிருமி நாசினி வழங்க வேண்டும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை கோவிலுக்கு வருவதை பாதுகாப்பு கருதி தவிர்க்க அறிவுறுத்தலாம். கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே வரிசையில் பக்தர்கள் அனுமதிக்க வேண்டும். பக்தர்கள் கோவிலுக்கு தேங்காய் பழம், பூ போன்றவற்றை கொண்டு வந்து அர்ச்சனை செய்யவதை தவிர்க்கலாம். அதேபோல் பிரசாதம் மற்றும் தீர்த்தம் (புனித நீர்) வினியோகத்தையும் தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
பங்குனி திருவிழா நடந்து வரும் கோவில்களில் அப்பகுதிகளில் உள்ள மாவட்ட கலெக்டர், காவல் துறை அதிகாரிகள், வருவாய் துறை, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோவில் அதிகாரிகள் எடுக்க வேண்டும். கோவில் நிர்வாகங்கள் முறையாக பாதுகாப்பு விதிகளை அமல்படுத்தி, நோய் தொற்று பரவுவதை தடுக்க முன்வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.