ஜனாசா நல்லடக்கம் குறித்து முஸ்லிம் தலைவர்களுடன் பேசியே தீர்மானிக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாடு ஏற்புடையதல்ல என்றும் ரெலோ கண்டனம் வெளியிட்டுள்ளது.
அத்துடன், முஸ்லிம் மக்களினுடைய ஜனாசா நல்லடக்கம் பற்றிய விடயத்தைத் தொடர்ந்தும் சர்ச்சைக்குரியதாகவே அரசாங்கம் ஆக்கிவருவது கண்டனத்துக்குரியது என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக ரெலோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனாசா விடயத்தில் முஸ்லிம் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது போல பாசாங்கு காட்டி அதைத் தொடர்ந்தும் நிறைவேற்றாது கேள்விக்குறியாக வைத்திருக்கின்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அரசாங்கம் தாங்கள் நினைத்த இடங்களில் தங்கள் வசதிக்கு ஏற்ப முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முற்படுவது அடிப்படை மனித உரிமை மீறிய செயலாகும். இரணைதீவிலே நல்லடக்கம் செய்ய முற்படுவதும் இதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
மாறாக முஸ்லிம் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி ஜனாஸாக்களை எங்கு அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை எட்டுவதே அந்த மக்களுடைய கோரிக்கையை கௌரவமான முறையில் நிறைவேற்றுவதாக அமையும்.
ஏற்கனவே, மன்னாரில் நல்லடக்கம் செய்ய முற்பட்டு அது வெற்றியளிக்காமல் போன நிலைமையிலே மீண்டும் இரணைதீவைத் தெரிந்தெடுத்திருப்பது இன முறுகலை தோற்றுவிக்கின்ற நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகிறோம். மேலும், இந்த முடிவு சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு பெரும் அசெளகரியங்களை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.
ஒரு முஸ்லிம் இறந்து 24 மணித்தியாலங்களுக்கு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே அவர்களுடைய பிரதான கோரிக்கையாக அமைந்திருக்கிறது. பொது இடங்களைத் தெரிந்தெடுத்து அங்கு நல்லடக்கம் செய்ய முற்படுகின்ற போது, நாட்கணக்கில் அல்லது வாரக்கணக்கில் இழுத்தடிப்பை ஏற்படுத்துவதோடு அந்தக் குடும்பங்கள் குறித்த இடங்களுக்குச் சென்று தமது முறையைப் பின்பற்றுவது இலகுவான காரியமாக இருக்கப்போவதில்லை.
இப்படியான, இழுத்தடிப்பு செய்வதையும் மற்றவர் கலாசார முறைகளை அரசாங்கமே தீர்மானிப்பதையும் தவிர்த்து, குறித்த இனத் தலைவர்களோடு பேச்சுவார்த்தையை நடத்தி நாடு முழுவதும் ஜனாஸா நல்லடகத்துக்கான பொது விதிமுறையைக் கையாள்வதன் மூலமே இதற்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதோடு அந்த மக்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதாக அமையும்.
தவிர, இப்படியான நடவடிக்கைகளால் முடிவுகள் எட்டப்படாது. ஆகவே, அரசாங்கம் பாசாங்கு செய்வதைவிட சரியான தீர்வினை முஸ்லிம் தலைவர்களுடன் கலந்தாலோசித்து முன்னெடுப்பதே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை கொடுக்கும். இதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும்.