பொத்துவில் – பொலிகண்டி பேரணி-சிவசக்தி ஆனந்தனிடம் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் விசாரணை

273 0

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் பொலிஸார் இன்றையதினம் (செவ்வாய்க்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்தனர்.

ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, வவுனியா ஆகிய மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இவ்வாறு வெவ்வாறு விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன்படி, சிவசக்தி ஆனந்தனின் வவுனியாவில் உள்ள அலுவலகத்திற்குச் சென்ற வவுனியா பொலிஸார் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் பங்கெடுத்தமை தொடர்பில் கேள்விகளைத் தொடுத்ததோடு, நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகவும் சுட்டிக்காட்டினர்.

இதன்போது, தனது பெயர் குறிப்பிட்டு எவ்விதமான நீதிமன்ற உத்தரவுகளும் வழங்கப்படவில்லை என்றும் தாம் நீதிமன்றத்தின் கட்டளைகளை மீறி நடக்கவில்லை என்றும் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை கோருகையில், அரசியல் கட்சியின் பிரதிநிதியாக மக்களுடன் மக்களாக போராட்டத்தில் பங்கேற்றதாகவும் சிவசக்தி ஆனந்தன் பதிலளித்துள்ளார்.

அத்துடன், ஒன்றுக்கு மூன்று தடவைகள் இவ்வாறு விசாரணை என்ற பெயரில் தான் உள்ளிட்ட குறிப்பிட்ட ஒரு சில அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை இலக்குவைத்து பொலிஸார் செயற்படுவது தொடர்பிலும் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன்போது ‘மேலிடத்து உத்தரவு’ என்று பொலிஸார் பதிலளித்ததோடு அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களிடத்தில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பதிலளித்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா பொலிஸாரின் ஒருமணிநேர விசாரணைகளைத் தொடர்ந்து பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸாரும், புதுக்குடியிருப்பு பொலிஸாரும் சிவசக்தி ஆனந்தனிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.