யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளும் இணைவு!

229 0

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்துகொண்டனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த போராட்டத்திற்கு பலரும் தமது ஆதரவினை தெரிவித்து இணைந்துள்ள நிலையில், இன்றையதினம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலரும் இந்த போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிரான இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும் எனக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.