மாந்திரிக சிகிச்சை அளிப்பதாக கூறி தாக்கப்பட்ட 9 வயது சிறுமி உயிரிழப்பு- மீஹாவத்தையில் சம்பவம்

207 0

மீஹாவத்தை- கண்டுபொட பகுதியில் மாந்திரிக சிகிச்சை அளிப்பதாக கூறி தாக்கப்பட்ட 9 வயது சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் உடலில் அமானுஸ்ய ஆவியின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும், அதனால் அவருக்கு பூஜைகள் மேற்கொள்ள வேண்டுமென கூறி அப்பகுதியில் மாந்திரிகம் செய்துவரும் பெண்ணொருவரே இந்த பூசைகளை மேற்கொண்டுள்ளார்.

அதாவது குறித்த சிறுமியை பூசைகளுக்கு உட்படுத்தி, அவருக்கு ஒருவகை எண்ணை பூசி, தோஷம் நீக்குவதாக தெரிவித்து தடி ஒன்றினால் அவரை மாந்திரிக சிகிச்சை அளிப்பதாக கூறிய பெண் தாக்கியுள்ளார்.

குறித்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமி, மயக்கமடைந்தமையினால் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக உறவினர்களினால் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆனாலும் சிறுமி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பியகம வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மாந்திரிகம் செய்துவரும் குறித்த பெண்ணை கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.