யாழில் வீட்டுத் திட்டத்துக்கான முழுமையான நிதியை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

235 0

வீட்டுத் திட்டத்துக்கான மீதிப் பணத்தை பெற்றுத்தருமாறு கோரி சண்டிலிப்பாய் பெரியவிளான் மக்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றிலில் நேற்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெரிய விளான் 3 ஆம் வட்டாரம் ஜே 153 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள மக்களுக்கு ஏழு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பொறுமதியான வீட்டுத்திட்டம் கடந்த அரசினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

வீட்டுத்திட்ட வேலைகளை படிப்படியாக முடிக்கும் பட்சத்தில் கட்டம் கட்டமாக பணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. பின்னர் எந்தக் கொடுப்பனவும் வழங்கப்படவில்லை.அதன் பின்னர் நிதி நிறுவனங்களிடம் கடன்பட்டு வீட்டு வேலைகளைச் செய்தும் முழுமையாக செய்து முடிக்க முடியவில்லை.

பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாமலும் வீட்டை முழுமையாக்காமலும் நிர்க்கதியில் இருப்பதாக தெரிவித்த மக்கள், தாம் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

எனவே இந்த வீட்டுத் திட்டத்துக்கான மிகுதிப் பணத்தை மிக விரைவில் பெற்றுதர ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அத்துடன் தமது கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்.