தனிமைப்படுத்தலை மீறிய 3,095 பேர் கைது – அஜித் ரோஹண

265 0

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்குப் புறம்பாகச் செயற்பட்டதாக 3,095 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியைப் பேணாமை தொடர்பிலேயே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் அனைவருக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளில் பிரதானமாக கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளான , முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் போன்ற வழிமுறைகளை பின்பற்றாமை தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆறுமணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 3,095 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிலையில், வார இறுதி தினங்களான நாளையும் நாளை மறுதினமும் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் இடம்பெறவுள்ளன.

இதன்போது, மேல்மாகாணத்திலிருந்து வெளி பிரதேசங்களுக்கு செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளிலிருப்பவர்களுக்கும் அன்ரிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, மேல்மாகாணத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளை பின்பற்றாத, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் சுகாதார பிரிவினருடன் இணைந்து பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனால், உரிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப்பிரிவினர் இது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும்.

இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்குப் புறம்பாக செயற்பட்டதாக அடையாளம் காணப்படும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.