மருதபாண்டி ரமேஸ்வரனுக்கு பிணை

220 0

கந்தப்பளை பார்க் தோட்ட விவகாரம் தொடர்பில் நுவரெலியா நீதிமன்றத்தில் கடந்த 03 ஆம் திகதி மாலை ஆஜரான நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரனை 1 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்வதற்கு நீதவான் அனுமதி வழங்கினார்.

அத்துடன், எதிர்வரும் 12ஆம் திகதிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இதன்போது நீதவான் உத்தரவிட்டார்.

கந்தப்பளை பார்க் தோட்ட அதிகாரிக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையில் உதவி தோட்ட அதிகாரியொருவரைத் தாக்கியமை, சேதம் விளைவித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கந்தப்பளை பொலிஸார் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

அதேநேரத்தில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற வகையில் நீதிமன்றத்தில் முன்னிலையானோரில் மூவர் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நுவரெலியா பிரதேச சபை தவிசாளர், அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 12 பேருக்கு 1 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.