வடக்கில் இன்றைய கொரோனா நிலை என்ன? வெளிவந்தது தகவல்

222 0

வடக்கு மாகாணத்தில் இன்று 727 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மூவருக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“வடக்கு மாகாணத்தில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு ரீதியாக பெறப்பட்ட மாதிரிகளில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 314 பேரின் மாதிரிகளும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 413 பேரின் மாதிரிகளும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடத்தில் அனைத்து மாதிரிகளும் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைக்கப்பெற்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடப் பரிசோதனையில் 3 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தபட்டது. அவர்கள் மூவரும் வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள்.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.