வருகிற 8-ந்தேதி சசிகலா சென்னை வர உள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைதண்டனை நிறைவடைந்து சசிகலா விடுதலையான நிலையில் வருகிற 8-ந்தேதி அவர் சென்னை வர உள்ளார். இதற்கிடையே சசிகலாவுக்கு ஆதரவாக அதிருப்தி அதிமுகவினர் சிலர் போஸ்டர் ஒட்டிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது. சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியவர்களை அதிமுக தலைமை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.
ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களுடன் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது.