திருமக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி பிரசார ஜீப் உடைப்பு- கொடிக்கம்பம் வெட்டி சாய்ப்பு

270 0

திருமக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி பிரசார ஜீப் உடைக்கப்பட்டு, கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

திருக்கோட்டை கடைவீதியில் மகாமாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் இஸ்மாயில் (வயது25). நாம் தமிழர் கட்சியின் உறுப்பினரான இவர் மன்னார்குடி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராம அரவிந்தனிடம் டிரைவராக உள்ளார். இஸ்மாயில் கட்சி பிரசாரத்திற்கு சென்றுவிட்டு நேற்று இரவு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டு அருகே ஜீப்பை நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த பா.ஜ.க.வை சேர்ந்த கணேசன்(25), முருகேசன்(30), கார்த்திக்(27) ஆகியோர் இங்கு ஜீப்பை நிறுத்த கூடாது என்று இஸ்மாயிலை மிரட்டியதாக தெரிகிறது. மறுநாள் காலையில் ஜீப்பின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து திருமக்கோட்டையில் இருந்து கன்னியாகுறிச்சி செல்லும் சாலையில் உள்ள நாம் தமிழர் கட்சி கொடி மரமும் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது.
தகவலறிந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தொகுதி செயலாளர் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொடிமரம் வெட்டுப்பட்ட இடத்தில் மீண்டும் மாவட்ட செயலாளர் வேதா பாலா முன்னிலையில் வேட்பாளர் ராம அரவிந்தன், செந்தில்குமார், கிளை கழக நிர்வாகி மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டு கொடியை ஏற்றினர்.