நீண்ட கால தடுப்பூசி வினியோகத்துக்கு இந்திய சீரம் நிறுவனத்துடன் ‘யுனிசெப்’ ஒப்பந்தம்

405 0

நீண்ட கால கொரோனா தடுப்பூசி வினியோகத்துக்காக இந்திய சீரம் நிறுவனத்துடன் ஐ.நா.சபையின் அங்கமான ‘யுனிசெப’ ஒப்பந்தம் போட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், பன்னாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகாவும் கொரோனா வைரசுக்கு எதிராக உருவாக்கியுள்ள தடுப்பூசியை ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தயாரித்து வினியோகம் செய்வதற்கு புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்த தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியா கடந்த மாதம் 3-ந்தேதி ஒப்புதல் அளித்தது. இந்த தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டு வருகிற நிலையில் சர்வதேச அளவில் அதற்கு பெருத்த கிராக்கி உள்ளது.

இந்தநிலையில, கோவிஷீல்டு தயாரித்து வழங்கும் புனே இந்திய சீரம் நிறுவனத்துடனும், நோவாவேக்ஸ் என்ற பெயரில் தடுப்பூசி தயாரித்து அளிக்கும் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடனும் நீண்ட கால தடுப்பூசி வினியோகத்துக்காக ஐ.நா. சபையின் குழந்தைகள் நல அமைப்பான ‘யுனிசெப் ’ ஒப்பந்தம் செய்துள்ளது.

இதை யுனிசெய் செயல் இயக்குனர் ஹென்ரிட்டா போர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “யுனிசெப், தனது கொள்முதல் கூட்டாளிகளுடன் சேர்ந்து, 100 உலக நாடுகளுக்காக 110 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்கிறது. ஒரு தடுப்பூசியின் விலை சுமார் 3 டாலர் (சுமார் ரூ.225), இது குறைந்த மற்றும் குறைந்த நடுத்தர நாடுகளுக்கானது” என குறிப்பிட்டார்.

இந்த வினியோக ஒப்பந்தம் முடிவு அடைந்துள்ளநிலையில் யுனிசெப் வினியோகஸ்தர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு ஒப்பந்தங்களின்போது தொடர்புடைய விவரங்களை தொடர்ந்து தெரிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகளவில் தடுப்பூசி செலுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிற யுனிசெப், இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளது.

உலகின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதுவும், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு பல நாடுகள் அணுகி உள்ளன என்பதுவும் குறிப்பிடத்தக்கது.