பொத்துவில் முதல் பொலிகண்டி போராட்டம்- மலையக மக்கள் முன்னணி முழு ஆதரவு!

303 0

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்துக்கு மலையக மக்கள் முன்னணியும் முழு ஆதரவை வழங்குவதாக முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹற்றனில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, சம்பள உயர்வுக்கான உரிமைப் போராட்டம் மற்றும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் நடைபெறும் யாத்திரை ஆகியன தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டார்.

அவர் கூறுகையில், “மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தி நாளை மலையகம் தழுவிய ரீதியில் நடைபெறும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மலையக தொழிலாளர் முன்னணி ஏற்கனவே தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர்கள் மத்தியில் பிளவு ஏற்படாமல் உழைக்கும் மக்களின் பலத்தை ஓரணியில் திரண்டு காட்ட வேண்டும் என்பதற்காகவே நாம் இந்த முடிவை எடுத்தோம்.

ஆயிரம் ரூபாய் சம்பளம் மட்டுமல்லாது, கூட்டு ஒப்பந்தத்தின்மூலம் கிடைக்க வேண்டிய தொழில் உரிமைகள் மற்றும் சலுகைகளும் முழுமையாகக் கிடைக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகன எமது அழுத்தம் தொடரும்.

சம்பள உரிமைக்கான போராட்டத்தை நடத்துவதற்கு மலையகத் தொழிலாளர் முன்னணி திட்டமிட்டிருந்த வேளையிலேயே, ஏனைய தரப்பும் அழைப்பு விடுத்துள்ளது. அந்தவகையில் ஊழியர்களுக்காக இணைந்து போராடி, தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்கு முழு ஆதரவையும் நாம் வழங்குவோம்.

இதேவேளை, வடக்கு, கிழக்கில் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்துக்கும் மலையக மக்கள் முன்னணி முழு ஆதரவை வழங்குகின்றது. இதுதொடர்பாக மாவை சேனாதிராஜாவுடன் கலந்துரையாடினோம். அவர்களும் எமது சம்பள உயர்வுப் போராட்டத்துக்கு ஆதரவை வழங்கியுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் இன்று காணிகள் அபகிரிக்கப்படுகின்றன. தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் ஆக்கிரமிப்புகள் நடைபெறுகின்றன. இவை நிறுத்தப்படவேண்டும். அதற்காக தமிழ் கட்சிகள் முன்னெடுக்கும் நடவடிக்கைக்கும் ஒத்துழைப்பு வழங்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.