அரியானாவில் மேலும் 14 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு

233 0

அரியானாவில் அம்பாலா, ரோதக், பானிபட் உள்பட மேலும் 14 மாவட்டங்களில் இணைய சேவையை அரியானா மாநில பா.ஜனதா அரசு நேற்று துண்டித்தது.

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. கடந்த 29-ந் தேதி, டெல்லி சிங்கு எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் நடந்தது.

அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் பதற்றம் நிலவுவதால், டெல்லியை ஒட்டியுள்ள அரியானா மாநிலத்தில் 3 மாவட்டங்களில் இணைய சேவை ஏற்கனவே துண்டிக்கப்பட்டது. இந்தநிலையில், அம்பாலா, ரோதக், பானிபட் உள்பட மேலும் 14 மாவட்டங்களில் இணைய சேவையை அரியானா மாநில பா.ஜனதா அரசு நேற்று துண்டித்தது. இந்த மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணி வரை இணைய சேவையோ, மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்பும் சேவையோ இருக்காது என்று மாநில அரசு கூறியுள்ளது.

அமைதி சீர்குலைவதை தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.