பிரதேச சபை உறுப்பினரை உடனடியாகக் கைது செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்து!

213 0

மீட்டியாகொட பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் தேடப்படும் படபொல பிரதேச சபை உறுப்பினரான சக்தி மதுசங்க என்பவரை உனடியாக கைது செய்வதற்கான சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கமைய குறித்த சந்தேகநபரின் அரசியல் பின்புலம் எதுவாக இருந்தாலும், அவர் மேற்கொண்ட குற்றச்செயல் தொடர்பில் அவரை உடனடியாக கைது செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு பணப்பரிசில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது,

அத்துடன் அவருக்கு பாதுகாப்பு அல்லது தேவையான விடயங்களை ஏற்படுத்தி கொடுப்பவர்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் மரணித்தார்.

இந்த கொலை செய்யப்பட்ட சம்பவம், பட்டபொல பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரின் திட்டத்திற்கு அமைய இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் இதுவரையில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது தப்பி சென்றுள்ள குறித்த பிரதேச சபை உறுப்பினர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071 859 1481 என்ற மீட்டியாகொட காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும்.

1997 அல்லது 118, 119 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தியும் தகவல் வழங்க முடியும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்