இனப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படாத இராணுவ பயிற்சி ஆபத்தானது – சபா குகதாஸ்

330 0

இனப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படாத நிலையில் தமிழ் இளையோருக்கு இராணுவப் பயிற்சி வழங்குவது ஆபத்தானது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர், ரெலோ இளைஞர் அணிச் செயலாளர் சபா குகதாஸ் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறிய 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இராணுவப் பயிற்சி இந்த நாட்டின் தமிழ் – சிங்கள மக்களிடையே இன நல்லிணக்கம் ஏற்படாமல் தொடர்ந்தும் சந்தேகங்கள், முரண்பாடுகள், பரஸ்பரம் இனங்களிடையே உரிமைகளைப் பகிர்ந்து கொள்ளாமை, போர்க்குற்றங்கள், மனிதப் படுகொலைக்கான நீதி நியாயங்கள் கிடைக்கப்பெறாத வரை இராணுவப் பயிற்சியை தமிழ்த் தலைமைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளுதல் இன ரீதியாகப் பாரிய ஆபத்துக்களை உருவாக்கும்.

அரசாங்கம் கட்டாயப்படுத்தி இராணுவப் பயிற்சி கொடுப்பது வேறு. அதனை தமிழ்த் தலைமைகளின் ஆதரவுடன் கொடுப்பது இனத்தின் நீதிக்கான பயணத்தில் பின்னடைவை உருவாக்கும்.

இலங்கை இராணுவம் போர் விதிமுறைகளை மீறியுள்ளமை தொடர்பில் நீதி கேட்கும் தமிழர் தரப்பு அந்தக் குற்றங்களைப் புரிந்த இராணுவத் தளபதியே பொறுப்பாக இருக்கும் போது இந்த இராணுவத்தை வழி நடத்திய ஆட்சியாளர்களே ஆட்சிக் கதிரையில் இருக்கும் போது அவர்களின் பயிற்சியை நாமே ஏற்றுக்கொள்வது குற்றம்புரிந்தவர்களை நாமே பிணை எடுப்பதற்கு ஒப்பானதாகும்.

இங்கு தான் தமிழர்களுக்கு ஆபத்து உருவாகிறது. இராணுவப் பயிற்சி தலைமைத்துவப் பண்புகளை நன்னடைத்தைகளை உருவாக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் அப் பயிற்சி கொடுக்கும் தரப்பிடம் அவ்வாறான எண்ணம் உள்ளதா? என்பதை நாம் ஆராய வேண்டும்.

அவ்வாறு இலங்கை இராணுவத்திடம் உள்ளாதா? என்றால் தமிழர் தரப்பின் சாதாரண பிரஜை கூட சொல்லுவான் பதில் இல்லை என்று
இராணுவப் பயிற்சியில் அடிப்படைப் பயிற்சி என்பது பாலர் பாடசாலை போன்றது.

பாலர் பாடசாலையில் கற்பிக்கப்படும் மனப்பதிவை எப்படி ஒரு மாணவன் தன் வாழ்வில் நடைமுறைப்படுத்துகின்றானோ அதேபோன்றது தான் இராணுவப் பள்ளியில் வழங்கப்படும் அடிப்படை பயிற்சியும்.

இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் 16 வயது மாணவனை அனுப்பி பயிற்சி பெற வைத்தால் அங்கு பயிற்றப்படும் கோசம், தேசியம் சார்ந்த விடயங்கள்,தேசியக் கொடியின் மகிமை, நாடு பற்றிய கொள்கைகள் என பல விடயங்கள் பயிற்றுவிக்கப்படும்.

தற்போது தமிழர்களின் பூர்வீக அடையாளங்களை மாற்றியமைக்கும் இலங்கை அரசு, தமிழ்த் தேசியம் தொடர்பில் பயிற்சிக் கல்லூரியில் மூச்சு விடுமா?
தமிழ்த் தேசியம் பேசி வாக்குவேட்டையில் ஈடுபடும் தமிழர் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். எழுந்த மானமாக தமிழில் பயிற்சி கொடுக்கலாம்.

முன்னாள் போராளிகளை பயிற்சி ஆசிரியர்களாக நியமிக்கலாம் எனவும் இல்லாவிட்டால் தென்னிந்தியாவிலிருந்து பயிற்று விற்பாளர்களை வரவழைக்கலாம் என கூறுவது மிகவும் பொறுப்பற்ற கருத்துக்கள் மாத்திரமல்ல இனத்தின் விடுதலைக்கான தூர நோக்குப் பார்வை இல்லாததன் வெளிப்பாடாகவே இக் கருத்துக்கள் அமைந்துள்ளன.

முன்னாள் போராளிகளைத் தொடர்ந்தும் விசாரணையில் சந்தேகக் கண்கொண்டு புலனாய்வாளர்களின் கிடுக்குப்பிடியில் வைத்திருக்கும் இராணுவ இயந்திரத்திடம் தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் நடவடிக்கையை ஒரு நிகழ்ச்சி நிரலாகச் செய்யும் அரசாங்கத்திடம், தென்னிந்திய தமிழர்களின் ஆதரவு ஈழத்தமிழர்கள் பக்கம் இருப்பதைப் பொருத்துக் கொள்ளாமல் தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்ற இலங்கை அரசாங்கத்திடம் நல்லெண்ண வெளிப்பாடுகளை எதிர்பார்க்க முடியுமா? எனவே தமிழ்த் தலைவர்கள் நிதானமாக முடிவுகளை எடுத்துவிட்டு கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.

தமிழர் தேசம் பலமிழக்கும் நிலைக்கு பாதை அமைக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.