துபாய் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் நாளை மறுதினம் திறக்கப்படுகிறது

225 0

கொரோனா தொற்று பரவலால் 10 மாதங்களாக மூடப்பட்டு இருந்த துபாய் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) முதல் பிரார்த்தனைக்காக திறக்கப்படுகிறது.

துபாயில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டு இருந்த செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க திருச்சபையை தற்போது சுகாதார முன்னெச்சரிக்கைகளுடன் மீண்டும் திறக்க சமூக மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து வரும் திங்கட்கிழமை முதல் தேவாலயம் மீண்டும் பொதுமக்கள் பிரார்த்தனைக்கு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த தேவாலய திருச்சபையின் பேராயர் அருட்தந்தை லென்னி கன்னுலி கூறியதாவது:-

செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் 1-ந்தேதி (திங்கட்கிழமை) திறக்க துபாய் சமூக மேம்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கூட்டு பிரார்த்தனைகள் நடத்த வழிகாட்டும் நெறிமுறைகளையும் அளித்துள்ளது. அதன்படி நாளை மறுதினம் முதல் தினசரி காலை 6.30 மணி மற்றும் 7 மணி ஆகிய 2 நேரங்களில் மட்டும் கூட்டு பிரார்த்தனை நடைபெறும். மற்ற நேரங்களில் தேவாலயம் மூடப்பட்டு இருக்கும். இந்த கூட்டுப்பிரார்த்தனையில் கலந்துகொள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுவர்களுக்கு அனுமதி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அந்த திருச்சபையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது:- 2 கட்டமாக நடைபெறும் பிரார்த்தனை கூட்டங்கள் ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனைகளில் நேரடியாக கலந்துகொள்ள இணையத்தளத்தில் பதிவு செய்து அனுமதியை உறுதி செய்துகொண்ட பின்னர் வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கட்டாயம் அனைவரும் முககவசம் அணிந்து உள்ளே வரவேண்டும். கூட்டம் நிறைவடைந்த பிறகு வழி எண் 1 மற்றும் 3 வழியாக உடனடியாக வெளியேறி விடவேண்டும்.

தேவாலயத்தினுள் சமூக இடைவெளியுடன் கையுறைகளையும் அணிந்து அமர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.