தொடர் தங்க சங்கிலி அறுப்பு சந்தேகநபர்கள் கைக்குண்டுடன் கைது!

277 0

வவுனியாவில் தொடர் தங்க சங்கிலி அறுப்புச்சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை, கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒருவார காலப்பகுதியில் வவுனியா வேப்பங்குளம், சாந்தசோலை, றம்பைக்குளம் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பேர், வீதியால் செல்லும் பெண்கள் அணிந்திருந்த நகைகளை அறுத்துச்சென்றிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாடுகளிற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மதவாச்சி பகுதியை சேர்ந்த இரண்டு பேரை, இன்று காலை கைது செய்திருந்ததுடன், அவர்களது உடமையில் இருந்த கைக்குண்டு மற்றும் வாகன இலக்கத்தகடுகளையும் மீட்டுள்ளனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் அறுக்கப்பட்ட தங்க நகைகள் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அடகு வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்  நாளைய தினம் நீதிமன்றில் அவர்களை முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.