இளம் குடும்ப பெண் கணவரால் தாக்கப்பட்டு கொலை

236 0

ஹற்றன்-  கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ- மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் 28 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான மாலிகா பிரியதர்ஷினி என்பவரே, அவரின் கணவரால் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு மற்றுமொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததை அடிப்படையாக வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதென பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 26 ஆம் திகதி மாலையே இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மறுநாள் 27 ஆம் திகதி மாலை குறித்த பெண்ணின் கணவர், தாமாகவே முன்வந்து கினிகத்தேனை பொலிஸில் சரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அங்குள்ளவர்களிடமும் விசாரணையை மேற்கொண்டனர். நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும்.

குறித்த கொலைச்சம்பவம் தொடர்பாக கினிகத்தேன பொலிஸாரும் ஹற்றன் கைரேகை பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.