பட்டம் எடுக்கச் சென்ற சிறுவன் கேணியில் மூழ்கி பலி

243 0

திருகோணமலை தலைமையகப்பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருக்கடலூர் பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தைச் சேர்ந்த 17 வயது விசேட தேவையுடைய சிறுவன் ஒருவன் கேணி ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளான்.

சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உள்ள கேணியில் நேற்று மாலை (28) விழுந்து கிடந்த பட்டத்தை எடுக்கச்சென்ற போது சிறுவன் கேணியில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த திருகோணமலை தலைமையப் பொலிஸார் மற்றும் கடற்படை சுழியோடிகள் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து இரவு 11.00 மணியளவில் கேணியில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாக திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை நகரில் தாய் தந்தையுடன் சேர்ந்து யாசகம் பெற்றுவந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் திருகோணமலை பிரதேச செயலாளரின் அலோசனைக்கு அமைய குறித்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தனது சகோதரியுடன் சேர்த்துக்கொள்ளப்பட்ட சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக குறித்த சிறுவர் பராமரிப்பு நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுவனின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.