திருவண்ணாமலையில் கிராமங்கள் வழியாக பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்கள்

251 0

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் கிரிவலம் செல்வதை போலீசார் தடுத்தனர். இருந்த போதிலும் பக்தர்கள் சாரைசாரையாக மாற்று வழியில் கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அவ்வாறு வருகின்ற பக்தர்கள் கிரிவலம் செல்வது தொன்று தொட்டுவரும் வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவியதால் பக்தர்கள் கிரிவலம் செல்ல பவுர்ணமி தினங்களில் தடை விதிக்கப்பட்டு வந்தது.

தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் சாமி வீதி உலா நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பவுர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய வகை கொரோனா பரவுவதாக கூறி இன்றும் (28-ந்தேதி) தைமாத பவுர்ணமிக்கு தடைவிதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கலெக்டர் உத்தரவு பிறப்பித்தின் பேரில் இன்று அதிகாலை 1.45 மணி முதல் போலீசார் கிரிவலப்பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் தடுப்புகள் வைத்து பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுத்து வருகின்றனர். இருந்த போதிலும் பக்தர்கள் சாரைசாரையாக மாற்று வழியில் கிரிவலம் சென்று வருகின்றனர்.

அவர்கள் செங்கம் சாலை வழியாக அத்தியந்தல் மற்றும் அடி அண்ணாமலை வழியாக கிரிவலம் சென்று வருகின்றனர்.

இன்று காலை மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றுள்ளனர். கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தராவிட்டாலும் சுமார் 25 ஆயிரம் பக்தர்கள் வரை இன்று கிரிவலம் செல்வார்கள் என்று தெரிகிறது.

கிரிவலப் பாதையில் சென்ற பக்தர்களுக்கு அடி அண்ணாமலை பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகளில் சில சன்னதிகளுக்கு பக்தர்கள் சென்று வழிபட்டனர் பக்தர்கள் வருகை காரணமாக பஸ் நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.