தமிழன அழிப்பிற்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் போராட்டம் -வடக்குகிழக்கு சிவில் அமைப்புகள்

287 0

வடக்கில் விஸ்வரூபம் எடுத்துவரும் தமிழன அழிப்பிற்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அணிதிரளவேண்டுமென வடக்குகிழக்கு சிவில் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இது தொடர்பில் வடக்குகிழக்கு சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளதாவது.

வடக்குகிழக்கில் பூர்வீககுடிகளான நாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எங்களது சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருகின்றோம்.

ஆனால் தமிழர்களின் போராட்டத்திற்கு செவிசாய்க்காத இலங்கை அரசு தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்படட இன அழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதை நாம் யாவரும் அறிவோம்.

யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகளில் வடக்குகிழக்கை இராணுவமயமாக்கி வரும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வடக்குகிழக்கின் பூர்வீக குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி அவர்களது இருப்பை இல்லாமல்; செய்வதற்காக பலவகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

இனஅடிப்படையில் தொல்பொருள் திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்திசபை ஊடாக பௌத்தமயமாக்கல் திட்டங்களை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. இதன்மூலம் வடக்கில் குறூந்தூர் மலை ஐயனார் கோவில்,வெடுக்குநாறிமலை சிவன் கோயில் கிழக்கில் கன்னியா பிள்ளையார் ஆலயம் உட்பட பல ஆலயங்கள் நமது பாரம்பரிய கலாச்சார சமய வழிபாடுகளை செய்ய முடியாதவாறு ஆக்கிரமிப்பு செய்யப்படுவதோடு அங்கு பௌத்த ஆலயங்களை நிறுவுவதற்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

மேலும் வடக்குகிழக்கில் உள்ள 20 பாரம்பரிய இந்து ஆலயஙகளை கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு தமிழ்பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளிற்கு எதிராகவும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடக்குகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் அனுப்பிவைத்துள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த கோரியும் வடக்குகிழக்கு சிவில் அமைப்புகளாகிய நாம் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டமொன்றை மூன்றாம் திகதி முதல் ஆறாம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளன.