ஜெயலலிதா நினைவு இல்லத்தில் பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து தீபக்கும், இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து தீபாவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதி சேஷசாயி முன் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, ஜெயலலிதா எப்படி வாழ்ந்தார் என்பதை மக்களுக்கு காட்டவும், அவரது நினைவை பாதுகாக்கவும் தான் வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படுகிறதே தவிர, வணிக பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்படவில்லை என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக திறக்க அனுமதி அளித்தார். ஆனால், வழக்கு முடியும்வரை அந்த இல்லத்தில் பொது மக்கள் பார்வையிட அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட்டார்.
திறப்பு விழா முடிந்த பின், வேதா நிலையத்தின் சாவியை சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும், அந்த பகுதியில் மக்களுக்கு இடையுறு ஏற்படுத்தும் வகையில் எந்த பேனர்களும் வைக்க கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், வேதா நிலையத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க கோரி அரசு தரப்பில் இன்று முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி அமர்வு முன்பு நாளை நடைபெறுகிறது.