யாழுக்கு வருகை தந்து திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா

230 0

யாழ்ப்பாணம் நகரம்- வட்டுக்கோட்டைக்கு வருகை தந்து, திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரிடம் எழுமாறாக பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையிலேயே கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதென வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இவ்வாறு தொற்றால் பாதிக்கப்பட்டவர், திருகோணமலை திரும்பியுள்ள நிலையில் அந்த மாவட்ட சுகாதாரத் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு வந்து செல்வோரிடம் எழுமாறாக மாதிரிகள் பெறப்படுகின்றன. அவ்வாறு மாதிரிகள் பெறப்பட்டவர்களில் ஒருவருக்கே நேற்று (புதன்கிழமை) தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று, 340பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.