மட்டக்களப்பில் மரத்தின் கிளை குத்தியதால் சாரதி பலி

245 0
மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பிரதான வீதியில், மரமொன்றுடன் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மரத்தின் கிளை குத்தியதால் சாரதி உயிரிழந்துள்ளார்.

இன்று (26) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பெரியகல்லாறு, வைத்தியசாலை வீதியை சேர்ந்த கே.சிறிக்காந்த் என்பவரே உயிரிழந்துள்ளார் என வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

மணல் ஏற்றும் கென்டர் வாகனத்தை, தும்பங்கேணி பிரதான வீதியூடாக ஓட்டுச்சென்று, சிறிய வீதியொன்றின் ஊடாக செலுத்தமுற்பட்டபோது, மரத்தின் கிளையொன்று வானத்தின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்துக்கொண்டு, சாரதியின் நெஞ்சுப்பகுதியைத் தாக்கியுள்ளது.

இதில் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும் வாகனத்தில் சென்ற உதவியாளர் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம், களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தைப் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைகளுக்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.