சென்னை விமான நிலையத்தில் ரூ.36 லட்சம் தங்கம் பறிமுதல்

250 0

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.35 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த நைனா முகமது (வயது 50), இப்ராகிம் ஆகிய 2 பேர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், இருவரையும் நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 9 விலை உயர்ந்த செல்போன்களை கைப்பற்றினார்கள். பின்னர் 2 பேரையும் தனியறைக்கு அழைத்து சோதனை செய்தனர்.

அதில் அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.35 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 706 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.