மீனவர்களின் சடலங்களை இன்று நள்ளிரவில் ஒப்படைக்க ஏற்பாடு

190 0

நெடுந்தீவுக் கடலில் உயிர் நீத்த நான்கு இந்திய மீனவர்களினது சடலங்களும் இரவு 8 மணியளவில் காங்கேசன்துறை ஊடாக தமிழகம் எடுத்துச் செல்லப்படவுள்ளன.

இலங்கை கடற்படை ரோந்துக் கப்பலுடன் மோதியதில் உயிரிழந்த 4 மீனவர்களின் சடலங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பி.சி.ஆர். பரிசோதனையின் பின்னர் இன்றைய தினம் உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெற்றது.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் நீதிமன்ற அனுமதியுடன் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் சடலங்கள் கையளிக்கப்பட்டு இன்று இரவு 8 மணியளவில் காங்கேசன்துறை எடுத்துச்செல்லப்பட்டு இலங்கைக் கடற் படையினரிடம் கையளிக்கப்படவுள்ளன.

இலங்கை கடற்படையினர் அவற்றை எடுத்துச் சென்று இன்று நள்ளிரவு வேளையில் நடுக்கடலில் வைத்து இந்திய கரையோரக் காவல் படையினரிடம் கையளிக்கவுள்ளதாகத் தெரியவருகிறது.