குருந்தூர்மலை விவகாரம்; சிங்களமயமாக்கலின் அடுத்தகட்ட நகர்வு – ரவிகரன்

261 0

குருந்தூர்மலை விவகாரம்; சிங்களமயமாக்கலின் அடுத்தகட்ட நகர்வு என ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், படையினர், வெலிஓயா, மகாவலி என பல வழிகளிலும் ஏற்கனவே ஆக்கிரமிப்புககளும் சிங்களமயமாக்கல் செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றது.

இந் நிலையில் தற்போது குருந்தூர் மலை தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் சிங்களமயமாக்கும் செயற்பாடு ஆரம்பித்திருக்கின்றது. எனவே இதை சிங்களமயமாக்கலின் அடுத்தகட்ட நகர்வாகவே இதனைப் பார்க்கமுடிவதாக ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

அதேவேளை தென்னிலங்கையில் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தினை அவமதித்ததாக சிறையிலிடப்பட்டுள்ளார். வடபகுதியிலே நீராவியடிப்பிள்ளையார் கோவில் விவகாரத்தில் ஞானசாரதேரரம், குருந்தூர்மலை விவகாரத்தில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரம நாயக்கவும், போலிசார், இராணுவம் உட்பட பலரும் நீதிமன்றக் கட்டளைகளை மீறியுள்ளனர். இதற்கு நீதித்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது.

முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள அவரது மக்கள் தொடர்பகத்தில் 21.01.2021 இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் கோவில் இந்துமக்கள் காலாதிகாமாக வழிபட்டுவந்த தலமாகும். இந்த இந்து ஆலயத்தின் அடையாளங்கள் யாவும் தற்போது அழிக்கப்பட்டுள்ளன.

அரசின் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வந்து தொல்லியல் ஆய்வுக்கென ஆரம்ப நிகழ்வினை 18.01.2021அன்று ஆரம்பித்துவைத்திருந்தார்.

அப்போது அங்கே இராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு இன்னொரு நாட்டில் படைகளைக் கொண்டுபோய்க் குவிப்பதைப்போல அந்த இடம் காட்சியளித்திருந்தது.

எனினும் நீதிமன்ற கட்டளையில் குறிப்பிட்டதைப்போல யாழ் பல்கலைக்கழக தொல்லியல்பீட மாணவர்களோ, அல்லது யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களோ யாரும் அழைக்கபபடவில்லை.

எல்லாமே சிங்களமயமாக காட்சியளித்திருந்தது. நாம் சிங்களமக்களுக்கு எதிரானவர்களல்ல.
சிங்கள இனவாதிகளுக்கு எதிராகவும், இனவாத கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராகவுமே நாம் எமது கருத்துக்களை வெளியிடுகின்றோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலையில் ஆய்வு என்ற பெயரில் அடுத்தகட்ட சிங்களமயமாக்கல் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவே எம்மால் பார்கமுடிகின்றது.

ஏற்கனவே மகாவலி (எல்) என்ற போர்வையில் தமிழ் மக்களுடைய பூர்வீகக் காணிகள் பறிக்கப்பட்டு சிங்களமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனைவிட 6000ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்யக்கூடிய வகையில் கிவுல் ஓயாத் திட்டத்தினை ஆரம்பிக்கப்பட்டது, குறித்த திட்டத்திற்கென உள்வாங்கப்பட்ட 6000ஏக்கர் நிலங்களும், குளங்களும் தமிர்கள் பரம்பரை பரம்பரையாக பூர்வீகமாக பயன்படுத்தி வந்தவையாகும் இந் நிலையில் தற்போது அந்த நிலங்களும், குளங்களும் சிங்களமக்களுக்கு வழங்கப்படவுள்ளன.

இதேபோல் வனஜீவராசிகள் திணைக்களம் என்ற பெயரில் 2017.01.24ஆம் திகதி வர்த்தமானிமூலம் நந்திக்கடல் 4141ஹெக்டயர், நாயாறு 4464ஹெக்டயர் மொத்தமாக 21,515 ஏக்கர் நீர்ப் பரப்பும், நிலப்பரப்புமாக அந்த வரத்தமானிமூலம் குறித்த வனஜீவராசிகள் திணைக்களம் அபகரித்து தமது ஆளுகையின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
இது தவிர வன இலாகத் திணைக்களம் என்ற பெயரில் 2010ஆம் ஆண்டிற்குப் பின்புமாத்திரம் 18000ஏக்கருக்குமேல் தமிழ் மக்களுடைய பூர்வீகக்காணிகள் எல்லாவற்றிற்கும் அவர்கள் எல்லைக் கற்களை நாட்டியுள்ளனர்.
அதேவேளை முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் தனியார்காணிகள் 379ஏக்கரும் அரசகாணிகள் 291ஏக்கருமாக மொத்த மாக 670ஏக்கர் காணிகளும் முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மக்களுடைய காணிகளாகும்.

இவ்வாறாக நில அபகரிப்புக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்றது.இதேபோல் எமது மணலாறு தற்போது வெலிஓயா ஆகிவிட்டது. முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் ஆறாவது பிரதேசசெயலகப் பிரிவாக தற்போது வெலிஓயா காணப்படுகின்றது.

அனுராதபும், திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு ஆகியநான்கு மாவட்டங்களின் பகுதிகளையும் இணைத்து, ஏற்கனவே அனுராதபுரம் மாவட்டத்தின் நிர்வாகப்பிரிவாகக் காணப்பட்ட வெலிஓயா பகுதியானது 2012ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்படி 6904பேர்கொண்ட பிரிவாக முல்லைத்தீவு மாவட்டத்துடன் தனிச் சிங்களபிரதேசசெயலர் பிரிவாக இணைக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது 31.12.2019ஆம் ஆண்டுப் புள்ளிவிபரப்படி 4076 குடும்பங்களைச் சேரந்த 11841 உறுப்பினர்களோடு அந்தப் பிரிவு இயங்கிவருகின்றது.

இதிலே 09கிராமஅலுவலர்பிரிவு, ஒரு தேசியப்பாடசாலை உள்ளடங்கலாக 08பாடசாலைகள் 1955மாணவர்கள் 137ஆசிரியர்களுடன் இயங்கிவருகின்றது.

தனித் தமிழ் பகுதியாகக் காணப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் தற்போது சிங்கள பிரதேசசெயலர் பிரவும் உருவாக்கப்பட்டு, மாவட்டத்தைச்சுற்றிலும் உள்ள தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்துக்கொண்டு, எமது தமிழர்கள் அதிகமாகவும் பெரும்பாண்மையாகவும் வாழும் இடத்தில் சிறுபான்மையாக தமிழரை ஆக்கும் நோக்கோடும், சிங்களவர்களை பெரும்பான்மையாக்கும் நோக்கோடுமே இந்த செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
இதேவேளை கடந்த 2018.09.04 அன்று குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கும்நோக்கோடு இரு பௌத்த பிக்குகள் அடங்கலான 12பேர்கொண்ட குழுவினர் வருகைதந்தனர் அவர்களின் வருகை குமுழமுனைப்பகுதி மக்களோடு இணைந்து நாம் தடுத்திருந்தோம்.

அதன் பின்னர் இதுதொடர்பில் கடந்த 06.09.2018அன்று போலீசாரால் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்நிலையில் கடந்த 27.09.2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது பிக்குமார்தலைமையிலான குழுவினருக்கு சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குழப்பங்களை விளைவித்ததாக நீதிமன்றி தெரிவித்திருந்தனர். அதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நீதிமன்றத்தின் தீர்ப்பினை இங்கு பலரும் மீறியுள்ளனர். பெரும்பாலும் தமிழ் மக்கள் பொதுவிடயங்களில் நீதிமன்றத் தீர்ப்புக்களை மீறுவதில்லை.

எனிம் தென்னிலங்கையில் ஒருவிதமாகவும் வடபகுதியில் இன்னொரு விதமாகவும் நீதிமன்றத்தின் தீர்புக்களை மீறுபவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகள் காணப்படுகின்றன.

குறிப்பாக ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தினை அவமதித்ததற்காக அங்கே சிறைவைக்கப்படுகின்றார்.
ஆனால் இங்கே வடஇலங்கையிலே நீதிமன்றத் தீர்ப்புக்களை அவமதித்தவர்களுக்கு இவர்கள் என்ன பதிலை வழங்கவுள்ளார்கள்.

குறிப்பாக நீராவியடிப்பிள்ளையார்ஆலய விடயத்தின்போது, பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளைகளை மீறியிருந்தார்.

தற்போது இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உட்பட இராணுவம், போலீசார் உட்டப பலர் இந்த குருந்தூர் மலை விடயத்தில் நீதிமன்றத் தீர்பினை மீறியுள்ளனர். இதற்கு உரியவர்கள் இதற்கு என்ன பதிலை வழங்கப்போகின்றார்கள்.

தேர்தல்காலங்களிலே அரசிற்கு ஆதரவழிப்பவர்கள், அரசோடு இணைந்துள்ளவர்கள், அமைச்சுப் பதவிகளைப் பறெ்றுள்ளவர்கள் இதற்கு என்ன நடவடிக்கை்எடுக்கப்போகின்றனர்.

குறிப்பாக எமது தமிழர்களின் நிலங்கள், ஆறுகள், குளங்கள், கடல் என அனைத்து வழங்களும் சொத்துக்களும் அபகரிக்கப்படுகின்றன.

இதற்கு பன்னாடுகள் என்ன நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளார்கள். நிச்சயமாகஇந்த விடயத்தில் இந்தியா உட்பட பன்னாடுகள் தலையிடுசய்து எமது பிரச்சினைக்கு தீர்வுகளைப் பெற்றுத்தரவேண்டும் – என்றார்.