வடக்கில் மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள்-யாழ், கிளிநொச்சியில் கண்டறிவு!

247 0

வடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று (வியாழக்கிழமை) 276 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே ஐவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தில் மூவருக்கும் யாழ்ப்பாணத்தில் இருவருக்கும் இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் பயிலும் மாத்தளையைச் சேர்ந்த மாணவி என மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இவர் மாத்தளையிலிருந்து கற்கைகளுக்காக யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிய நிலையில் விடுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

அத்துடன், மற்றையவர், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர் எனவும், இவர் கொழும்பிலிருந்து வருகைதந்த நிலையில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இதேவேளை, கிளிநொச்சி பூநகரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ள தொற்றாளர்கள் மூவரும் கொழும்பிலிருந்து வருகைதந்த நிலையில் சுயதனிமைப்படுத்தப்படிருந்தவர்கள் என மருத்துவர் கேதீஸ்வரன் கூறியுள்ளார்.