வவுனியாவில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

228 0

வவுனியா- பட்டானிச்சூர் கிராமம் தனிமைப்படுத்தலில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் குறித்த பகுதியில் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினால் உடன் அமுலுக்கு வரும் வகையில்  பட்டானிச்சூர் பகுதி சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியல் தொழில்நுட்ப பீடத்தில் 3ம் வருடத்தில் கல்வி கற்கும் வவுனியா பட்டானிச்சூர் மாணவர் ஒருவருக்கும் அதே பகுதியினை சேர்ந்த பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த கர்ப்பவதி பெண் ஒருவருக்கும் அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்பின்னர் குறித்த கிராமம் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு, கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டப்போது,  ஒரே குடும்பத்தினை சேர்ந்த மேலும் 7கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து வவுனியா வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளில் மேலும் 55பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் அடிப்படையில் வவுனியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று, ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமையினால் பட்டானிச்சூர் கிராமம் தனிமைப்படுத்தலில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளது.