நாடாளுமன்றில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஐவருக்கு கொரோனா!

212 0

இலங்கை நாடாளுமன்றில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அண்மையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேரும், பணியாளர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றில் சகலரும் பி.சி.ஆர்.பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கமைய கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள், பணியாளர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதில் ஐந்து அதிகாரிகளுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், நேற்றும் சிலருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் 15  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட்கள் 463 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில், எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

எனினும், நாடாளுமன்ற பணியாளர்களுடன் நாடாளுமன்ற பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 448 பேர் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இவர்களில் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.